16/02/2026
பட்டா அளவு திருத்தம்: வருவாய் துறை அலுவலத்திற்கு அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள் !!!
தமிழகத்தில் நிலம் என்பது வெறும் சொத்து அல்ல; அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, மரபு, வாழ்வாதாரம். ஆனால், அந்த நிலத்தின் பரப்பளவு குறித்து உருவாகும் கணக்குப் பிழைகள், நிர்வாக முரண்பாடுகள், அலுவலக நடைமுறைகள் ஆகியவை பொதுமக்களை ஆண்டுக்காண்டு அலைக்கழித்து வருவது வேதனையான உண்மை.
அளவீட்டு முறைகளின் முரண்பாடு !!!
தமிழக அரசின் வருவாய் துறை பட்டா ஆவணங்களில் ஏக்கர் / ஏர் / ஹெக்டேர் முறையில் பரப்பளவை பதிவு செய்கிறது. அதே நேரத்தில், பதிவு துறை பத்திரங்களில் சதுரடி கணக்கில் பரப்பளவை கையாளுகிறது.
இரு துறைகளிலும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை வேறுபடுவதால், கணக்கில் சிறிய மாற்றமே இருந்தாலும் நிலத்தின் மொத்த பரப்பளவில் பெரும் முரண்பாடு தோன்றுகிறது.
மேலும், FMB (Field Measurement Book) வரைபடங்கள் மீட்டர் அளவீட்டில் இருப்பதால், கணக்கீட்டில் ஏற்பட்ட சிறிய தவறே நிலத்தின் ஓர் பக்கம் குறைவாகவோ, அதிகமாகவோ காட்டப்படும் நிலையை உருவாக்குகிறது. இதன் விளைவாக:
பட்டா மற்றும் பத்திர பரப்பளவு ஒத்துபோகாதது .
ஏற்படும் சிக்கல்கள் !!!
➡️வங்கி கடன் (Approved Loan) பெற சிக்கல்
➡️அண்டை நில உரிமையாளர்களுடன் எல்லைத் தகராறு
➡️விற்பனை அல்லது மாற்று பதிவு தடை
➡️அலுவலக நடைமுறைகளின் சிக்கல்கள்
பட்டா அளவு திருத்தம் தொடர்பான மனுக்களை ஆன்லைன் முறையில் அளிக்க முடியாத சூழலில், பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை நாட வேண்டியுள்ளது.
அங்கு:
பலமுறை ஆவணங்கள் கேட்கப்படுதல்
அளவையர் வருகை தாமதம்
மனுக்கள் நீண்ட நாட்கள் நிலுவையில் இருப்பது
காரணமின்றி கோப்புகள் திருப்பி அனுப்பப்படுதல்
இவற்றால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சட்டத்தை அறியாத சாதாரண குடிமக்கள் இந்த நடைமுறைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
லஞ்சம் – ஒரு திறந்த ரகசியமா?
சில இடங்களில், வருவாய் துறையின் தவறுகளைச் சரி செய்ய கூட பொதுமக்கள் “வேகமாக முடிக்க” என்ற பெயரில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தவறு நிர்வாக அமைப்பின் பக்கத்தில் இருந்தாலும், அதன் சுமை மக்களின் தோள்களில் விழுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.
CM Helpline – தீர்வா? இல்லையா?
முதல்வரின் முகவரி துறை மற்றும் CM Helpline மூலம் மனு அளிக்கும் வசதி இருந்தாலும், பல மனுக்கள் நீண்ட காலம் கிடப்பில் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கண்காணிப்பு மற்றும் காலவரையறை இல்லாமல் மனுக்கள் முடங்கிக் கிடப்பது நம்பிக்கையை குறைக்கிறது.
தீர்வுக்கான பரிந்துரைகள்
இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண:
1. அளவீட்டு முறைகளை ஒருங்கிணைத்தல் – அனைத்து துறைகளிலும் ஒரே முறை (Metric System) பயன்படுத்துதல்.
2. FMB தரவுகளை முழுமையாக டிஜிட்டல் மாற்றம் செய்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வருதல்.
3. ஆன்லைன் பட்டா திருத்த விண்ணப்ப முறை கொண்டு வருதல்.
4. காலவரையறைச் சட்டம் – மனு தீர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாட்கள்.
5. லஞ்சம் புகார் அளிக்க பாதுகாப்பான அமைப்பு மற்றும் கடுமையான நடவடிக்கை.
நிலம் தொடர்பான ஆவணங்களில் சிறிய கணக்குப் பிழையே ஒரு குடும்பத்தின் வாழ்நாளை பாதிக்கும் அளவுக்கு பிரச்சனையை உருவாக்குகிறது. நிர்வாகத் தவறுகளுக்காக மக்களை அலைக்கழிப்பது முற்றிலும் தவறு.
பட்டா அளவு திருத்தம் போன்ற அடிப்படை சேவைகள் எளிமையாக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியும்.
நிலம் என்பது மனிதரின் உரிமை. அந்த உரிமையை உறுதிசெய்வது அரசின் கடமை.