20/06/2014
Courtesy: Nanayam - Vikadan:
Current Real Estate : வீட்டு மனையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்.
ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுக்க மந்தநிலைதான் காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும் எனில், மெட்ரோ நகரங்களில் கடந்த ஓராண்டில் ரியல் எஸ்டேட் விலை 20-30% வீழ்ச்சி கண்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்படவில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில் போடப்பட்ட லே-அவுட்களில் மனைகள், மறுவிற்பனை விலை இல்லாமல் மந்தநிலையில் காணப்படுகிறது.
புதிய லே-அவுட்களில் மனை விலை, பழைய லே-அவுட் மறுவிற்பனை விலையைவிடக் குறைவாகப் பல இடங்களில் காணப்படுகிறது. அந்த வகையில் மனையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்பது பலரின் பரிந்துரையாக இருக்கிறது.
ரியல் எஸ்டேட் முதலீட்டில் லாபம் பார்க்க வேண்டும் எனில், சில அடிப்படை விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, குறுகிய காலத் தேவைக்கு உள்ள தொகையை மனை முதலீட்டில் போடக் கூடாது. அதாவது, இந்தப் பணம் இன்னும் 10-15 ஆண்டு களுக்குத் தேவையில்லை என்கிற சூழலில்தான் மனையை முதலீட்டு நோக்கிலோ, பிற்காலத்தில் வீடு கட்டும் நோக்கத்திலோ வாங்க வேண்டும்.
மேலும், இடைப்பட்ட காலத்தில் எதிர்பாராதவிதமாக மனை விலை இறங்கினால் கவலைப்படக் கூடாது. காரணம், ரியல் எஸ்டேட் என்பது நீண்ட காலத்தில்தான் லாபம் தரும். ஆனால், குறுகியகாலத்தில் விலை இறக்கத்தைச் சந்திக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது.
ரியல் எஸ்டேட் நிலவரம் பொதுவாகவே சுணக்கமாக இருப்பதால், மனை விலையை பேரம்பேசி விலையைக் குறைக்க முடியும். அதுவும், மொத்த பணமும் தயாராக வைத்திருக்கும் நிலையில் விலையில் கணிசமாகப் பேரம் பேச முடியும்.
இனி, தமிழகம் முழுக்க மனை முதலீட்டுக்கு ஏற்ற முக்கிய இடங்களைக் தந்துள்ளோம்.
கோயம்புத்தூர்:
ரியால்டிகாம்பஸ் டாட் காம் நிறுவனத் தின் நிறுவனர் சங்கர ஸ்ரீனிவாசனுடன் கோவை ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்துப் பேசி னோம். ''கடந்த சில ஆண்டுகளாக கோவையில் முதலீடு செய்யும் என்.ஆர்.ஐ களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், மனை விலை என்பது கடந்த ஓராண்டாகப் பெரிய அளவில் உயரவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் ரியல் எஸ்டேட் சூடுபிடிக்க வாய்ப்பு அதிகம். விலை குறைவாக இருக்கும்போது மனை வாங்குவது லாபகரமாக இருக்கும்'' என்றார்.